Saturday, April 27, 2024

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை
ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்டும்" என்று தொண்டை நரம்பு புடைக்க சொல்வார்கள். ஆனால் சிஸ்டம் என்றால் என்ன என்கிற தெளிவு பெரும்பாலும் இருப்பதில்லை. முக்கியமாக "நாம் எவ்வளவு மோசமான கட்டமைப்பை வைத்திருந்தாலும் ஒரு நல்ல ஆசிரியர் ஒருவர் இருந்தால் அந்த மோசமான கட்டமைப்பிலும் மிகச்சிறந்த மாணவர்களை அவரால் உருவாக்கி காமிக்க முடியும் என்று ஏற்கனவே அறிந்த உண்மையை இந்த நூலின் வழியாக மீண்டும் கண்டு கொண்டேன். இந்த நூல் முக்கியமாக ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ளும் அனைத்து மாணவ ஆசிரியர்களுக்கும் பாடமாக வைக்கப்பட வேண்டும் . ஆசிரியர் பயிற்சி எடுத்துக் கொள்ளும் மாணவர்களுக்கு நாம் எதை சொல்லித் தருகிறோமோ இல்லையோ அவர்களது டீச்சிங் ஆட்டிட்யூட் வளர்த்துக் கொள்வதற்கு நல்ல பல புத்தகங்களை பரிந்துரை செய்ய வேண்டும். அந்த புத்தகங்களை அவர்கள் நன்கு உள்வாங்கிக் கொண்டு உள்ளார்களா என்பதையும் சோதித்து அறிய வேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் சிலர் பி எட் பட்டங்களை "வாங்கி" விடுகிறார்கள் கேட்டால் Irregular Mode என்கிறார்கள். இந்த நூலுக்கு முன்னுரை எழுதி இருப்பவர் சா மாடசாமி அவர்கள். தனது முன்னுரையில் மாடசாமி அவர்கள் "ஆசிரியர்களே தேவையில்லை என்று ரூசோ சொன்ன அதிரவைக்கும் வாக்கியத்தோடு நூல் தொடங்குகிறது ஆனால் ஆசிரியர் வகுப்பறையின் பிராணவாயு என்கிற இவனோவ் கருத்தை நோக்கி நூல் நகர்கிறது" என்கிறார். நான் முன்பு குறிப்பிட்டது போல ஒரு பள்ளியின் கட்டட மற்றும் தளவாட வசதிகளையும் அப்பள்ளி அமைந்துள்ள சமூகப் பொருளாதாரச் சூழல்களையும் கடந்து தனிமனித ஆசிரியர் பங்களிப்பு கல்வித்தரத்தை பெருமளவு உயர்த்த முடியும் என்பது தான் இந்த நூலின் அச்சாணி. இந்த கருத்தை அனைவரும் அடிக்கோடிட்டு மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நூலில் நான் தெரிந்து கொண்டு ஆச்சரியப்பட்ட ஒரு தகவல் என்னவென்றால் ரஷ்ய கல்வியாளர் ஆண்டன் மகரன்கோ என்பவர் தான் பள்ளிகளில் பிஇடி பீரியட் என்ற ஒன்று உருவாக காரணமானவர். ஆம், 1920 க்கு பிறகு தான் விளையாட்டு பாடவேளை பள்ளிக்குள் வந்தது. அவருடைய புகழ்பெற்ற வாசகம் "குழந்தைகளோடு விளையாடு ஒரு போதும் விளையாட்டை வழிநடத்தாதே" புத்தகத்தின் முதல் பகுதி முழுவதும் பல்வேறு நாடு மத இன குழு குழுக்களில் கல்வி என்பது எப்படி எல்லாம் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை மிக விரிவாக அலசுகிறது. இரண்டாவது அத்தியாயத்தில் தான் நூலின் தலைப்பான இது யாருடைய வகுப்பறை தொடங்குகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலம் தொட்டு ஒவ்வொரு முறையும் கொண்டுவரப்பட்ட கல்வி கொள்கைகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறார். கல்வித்துறை சார்ந்த அனைத்து அலுவலகங்களும் அமைந்துள்ள வளாகம் DPI வளாகம் என்று அழைக்கப்படுகிறது அதில் டிபிஐ என்பது DEPARTMENT OF PUBLIC INSTRUCTIONS என்பதை குறிக்கும் அதாவது கல்வி என்பதை போதனை என்று குறிப்பிட்டு இருப்பார்கள். ஆங்கிலேய அரசு கல்வியை போதனையாய் மாற்றி வெறும் கவனிப்பவராக அடிபணிபவராக மாணவர்களை வைத்தது என்கிறார். ஆங்கிலேயர்கள் வந்தது வந்தபின் கல்வி அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஒன்றாக விரிவுபடுத்தப்பட்டது என்று நாம் சிலாகித்தாலும் கூட அவர்கள் என்னவோ அவர்களுக்கு தேவையான எழுத்தர் போன்ற பணிகளுக்கு உகந்தவாறு மட்டுமே கல்வியை இங்கே கட்டமைத்து உள்ளனர். அதனால்தானோ என்னவோ இன்று வரை நாம் சேவகர்களை மட்டுமே உற்பத்தி செய்து கொண்டுள்ளோம். ஒருபோதும் முதலாளிகளையோ பெரிய விஞ்ஞானிகளையோ அதிக அளவில் உருவாக்க வில்லை. மூன்றாவது அத்தியாயம் சற்று சுவாரசியமான தலைப்போடு "உங்களுக்கு அறிவியல் தெரியும் ராமலிங்கத்தை தெரியுமா?!" நான் கூட ஏற்கனவே ஒரு கட்டுரையில் சொல்லி இருக்கிறேன் ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தார்கள் என்றால் அந்த 50 மாணவர்களுக்கும் 50 விதமான முகங்களை ஆசிரியர் கொண்டிருக்க வேண்டும் அதாவது தனியாள் வேறுபாடு அறிந்து அனைவரையும் அரவணைத்தும் அனைவருக்கும் கல்வி சென்று சேரும் வகையிலும் ஆசிரியர் போதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதை தான் ராமலிங்கத்திற்கு அறிவியல் நடத்த வேண்டிய ஆசிரியர் ராமலிங்கத்தின் சமூக பொருளாதார பின்னணி குறித்து தெள்ளத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்கிற பொருளில் எழுதியுள்ளார். மதிப்பீட்டு முறை என்பது மாணவர்கள் கல்வி கற்றுள்ள அளவினை அறிந்து கொள்ள உருவாக்க உருவாக்கப்பட்ட ஒரு நடைமுறை ஆனால் தற்போதைய நமது கல்வி கட்டமைப்பில் ஒட்டுமொத்த கல்வியும் அந்த தேர்வு என்ற ஒன்றையே சுற்றி சுற்றி ஓடி வருகிறது என்றால் அது மிகையாகாது. நூலாசிரியர் இதையே ஆசிரியர் என்பவர் யார் என்ற கேள்விக்கு மூன்று பதில்களாக கொடுத்துள்ளார். 1. ஒன்று தேர்வுக்கு பயிற்றுவிற்பவர். 2. தேர்வு கண்காணிப்பாளர். 3. தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டாளர் ஆமாம், மேல்நிலை வகுப்புகளைப் பொறுத்த வரையில் பார்த்தோம் என்றால் மொத்த வேலை நாட்களில் ஜூன் முதல் நவம்பர் வரை மட்டுமே பாடங்களை போதிக்கிறோம். அதன்பிறகு டிசம்பர் துவங்கி மார்ச் வரையில் தொடர்ந்து தேர்வுகளை வைத்து விடைத்தாள் திருத்தி மீண்டும் தேர்வுகளை வைத்து விடைத்தாள் திருத்தி பொது தேர்வுக்கு மாணவர்களை கூர்மைப்படுத்துகிறோம் அதாவது மொத்த வேலை நாட்களில் 40 விழுக்காடு நாட்களை தேர்வை நோக்கி மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி என்றால் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட அந்த நூல்களின் உள்ள பாடப்பொருளை வெறும் ஐந்து மாதங்களில் நடத்தி விட முடியுமா இந்த ஒரு விஷயம் போதும் நாம் எந்த அளவுக்கு தேர்வினை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள. நான்காவது தலைப்பு சற்றே அதிர்ச்சிகரமான தலைப்பு "வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போது" கும்பகோணம் தீ விபத்து சம்பவங்களின் போது சம்பவத்தின் போது ஆசிரியர் வாயில் கை வைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும் என்று சொல்லிச் சென்ற கட்டளையை நிறைவேற்றும் வண்ணம் வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்த அந்த நிலையிலும் மாணவர்கள் எழுந்து ஓட முயற்சிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்திருக்கிறார்கள் சில குழந்தைகள் வாயில் கை வைத்த வண்ணமே கருகி இருந்து இருக்கிறார்கள் என்றெல்லாம் கூட ஆசிரியர் கூறி இருக்கிறார். அதாவது நமது கல்வி முறையில் மாணவர்களை எந்த அளவுக்கு ஒழுக்கம் என்ற பெயரில் அடக்கி ஒடுக்குகிறோம் என்று சற்று காட்டமாக இந்த அத்தியாயத்தில் கூறியிருக்கிறார். பள்ளிகளில் பிரதானமாக நாம் கடைப்பிடி கடைபிடிக்கும் பல மரபுகளை விதிகள் என்கிற அடிப்படையில் இங்கிலாந்து சேர்ந்த கல்வியாளர்கள் ஆயிரக்கணக்கான பள்ளிகளையும் வகுப்பறைகளையும் ஆய்வு செய்து பட்டியலிட்டு உள்ளனர் அதில் மொத்தம் 4,184 விதிகள் கண்டறிந்துள்ளனர். அதாவது இவற்றை தொகுத்த போது உலகத்தில் உள்ள மிக நீண்ட அரசியல் சட்டமான இந்திய அரசியல் சட்டத்தில் கூட இத்தனை ஷருத்துகள் இல்லை என்று வியந்து போகிறார். நூலாசிரியர் பொருளாதாரம் பகூறி பல நுணுக்கமான வியக்க தக்க உண்மைகளை அங்கங்கே கூறியுள்ளார். ஆத்தர் ஜோன்ஸ் ஸ்டீபன் ஆல்பர்ட் போன்ற சமூக விஞ்ஞானிகள் லட்சக்கணக்கான குடும்பங்களின் மீது நடத்திய ஆய்வுகளின் முடிவில் அதீத உற்பத்தி தொழில்துறையின் புதிய முகவரியாய் மாறியபோது ஒரு வீட்டிற்கு ஒரு டிவி எனும் நிலையை உடைத்து அதே நான்கு சிறு குடும்பங்களுக்கு ஒரு டிவி பிரிட்ஜ் என்று விற்க வேண்டிய சந்தை நிர்பந்தங்களுக்காக கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனித்தனி குடும்பங்களாக பிரிந்திருக்கும் நுணுக்கத்தை சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். இன்றைய காலத்தில் பெற்றோர் தங்களது குழந்தைகளை ஒரு அசாதாரண வளர்ப்பு செல்லப்பிராணியாக பாவிக்கின்றனர். உதாரணமாக என் வீட்டு நாய் குட்டிக்கரணம் அடிக்கும் பூனை தலைகீழாய் நடக்கும் எங்கள் வீட்டு கிளி பேசும் என்பது போல ஒரு குழந்தையை பாட வைப்பது கராத்தே வீணை வகுப்பு ஹிந்தி கிளாஸ் என தொடங்கி கல்விக்கான நேரம் போக மீதியை குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் குதூகலமாய் விளையாட அனுமதிக்காமல் உருப்படியாய் எதையாவது கற்க பணம் செலவழித்து உற்றார் உறவினரிடம் என் குழந்தைக்கு இந்த விஷயங்கள் தெரியும் என பிரஸ்தாபிப்பது வெளிப்படையான சமூக அம்சமாக இன்று மாறி உள்ளது. தங்கள் குழந்தைகளை இன்று வீட்டின் ஆடம்பர அலங்கார அழகு சாதனமாக கருதுகிறார்கள். RTE சட்டம் தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்த காரணிகளையும் அந்த சட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும் ரொம்ப மிகவும் தெளிவாக ஆசிரியர் கூறியுள்ளார். குழந்தைகளின் குரலுக்கு செவி மடுக்காத வகுப்பறை பற்றி மிகவும் காத்திரமாக நூலாசிரியர் கூறியுள்ளார் "குழந்தைகளின் குரலுக்கு செவி மடுக்காத வகுப்பறைகள் சவக்கிடங்கை விட உயிரற்றதாக போர்க்களத்தை விட வன்முறை மிக்கதாகவே இருக்க முடியும்" என்கிறார். "தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2005" (NCF2005) ஆவணம் பற்றி எத்தனை ஆசிரியர்களுக்கு தெரியும் என்று நூலாசிரியர் ஆதங்கப்படுகிறார். யஷ்பால் கமிஷனின் ஐந்து கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1. பள்ளிக்கு வெளியில் உள்ள வாழ்க்கையை பள்ளியறிவோடு தொடர்பு படுத்துவது. 2. கற்றலை பொருள் உணர மனப்பாட முறையில் இருந்து மாற்றுவதை உறுதி செய்வதோடு புரிந்து கற்றலை முன் வைப்பது 3. பாட நூல்களுக்கு அப்பாற்பட்டு படிக்கும் வகையில் கலைத்திட்டத்தை பெருமைப்படுத்துவது 4. தேர்வு முறைகளை மேலும் நெகிழ்வாக்குவதுடன் வகுப்பறையில் செயல்பாடுகளின் மூலம் புதிய வகை மதிப்பிடுதல் முறையை முன்மொழிவது. 5. நாட்டின் ஜனநாயக பன்முகத் தன்மைக்கு உட்பட்டு புறக்கணிக்கப்பட்ட தனித்துவங்களை அக்கறையோடு வளர்த்தெடுத்தல். இந்த ஐந்து விஷயங்கள் தான் தேசிய கலைத்திட்ட வடிவமைப்பின் மிக முக்கிய முதுகெலும்பாகும். உங்கள் வாழ்நாளில் நீங்கள் அறிந்த ஒரு நல்லவரை குறிப்பிடுங்கள் என்று சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி சேனல் கேட்டபோது 99% ஏதாவது ஒரு ஆசிரியரின் பெயரை எழுதினார்களாம். அப்படி என்றால் ஆசிரியர்களான நாம் எவ்வளவு சமூக பொறுப்புடன் கலந்து கொள்ள வேண்டும். நான் துவக்கத்தில் சொல்லியது போல கட்டமைப்பு எவ்வளவு மோசமாக இருந்தாலும் ஒரு நல்ல ஆசிரியர் நல்ல மாணவர்களை உருவாக்க இயலும் என்பதை கல்வியியல் வல்லுநர்கள் ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளனர். அதில் அவர்கள் கூறிய முக்கியமான மூன்று விஷயங்கள் 1. கற்பித்தலில் ஆசிரியர் காட்டும் முழுமையான ஈடுபாடு 2. குழந்தைகள் மீதான ஆசிரியரின் நேசம் பிணைப்பு விருப்பு. 3. தன் வேலை விஷயத்தை யாருடைய கண்காணிப்பும் இன்றி முக்கிய கடமையாக கொள்ளுதல். மேற்கண்ட இந்த மூன்று சிறப்பியல்புகளோடு கற்றல் கற்பித்தலின் நுணுக்கங்கள் பாடத்தில் வல்லமை ஆகியவை இணையும் போது ஆசிரியர்கள் மிகச்சிறந்த வகுப்பறையை கட்டமைக்கிறார்கள் என்று அவர்களின் ஆய்வு முடிவு கூறுகிறது. அடுத்ததாக வாட்ஸ் அப் மூலமாக நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் உலகத்திலேயே கல்வியில் தலைசிறந்த நாடாக இருப்பது பின்லாந்து என்பதாகும். அதை நூலாசிரியர் "கல்வியின் மெக்கா பின்லாந்து" என்கிறார். அந்த நாட்டின் கல்வி முறையை பற்றி நேரடியாக தெரிந்து கொள்வதற்காக உலகம் முழுவதிலிருந்தும் கல்வியாளர்கள் அங்கே சுற்றுலா செல்கிறார்களாம் அந்த கல்வி சுற்றுலா மூலமாக 27 விழுக்காடு அந்நிய செலாவணி அந்த நாட்டிற்கு குவிகிறது என்றால் அந்த நாட்டு கல்வி முறை மீது நமக்கு மிகப்பெரிய மரியாதை உண்டாகிறது. அங்கே 13 வயது வரை குழந்தைகளில் முதலிடம் இரண்டாம் இடம் என்கிற தரப்படுத்துதல் என்கிற விஷயம் கிடையாது. நாம் அநேகமாக அனைத்து சிற்றூர்கள் வரை கல்வியில் கணினியின் பங்கினை ஐசிடி என்று பெருமிதமாக கொண்டு சென்றுள்ளோம். ஆனால் கல்வியில் உலக அளவில் முதல் இடம் பிடித்துள்ள பின்லாந்தில் வகுப்பறைகள் இன்று வரை கணினி மயமாக்கப்படவில்லை. எத்தனை கணினி மற்ற இன்னபிற தொழில்நுட்பங்கள் வந்தாலும் ஒரு வகுப்பறையில் அற்புதங்களை ஆசிரியர்தான் நிகழ்த்த முடியும் என்பதை நம்புவதால் தான் அந்த நாடு கல்வியில் முதலிடத்தில் உள்ளது. மேலும் அங்கே ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை தாங்களே தயாரிக்கின்றனர். இங்கே உள்ளது போல ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் ஒரே நூல் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி பாடத்தினை நடத்த வேண்டும் என்பன முதற்கொண்டு இப்போது உள்ள எமிஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேல் இடத்திலிருந்து கட்டளைகள் பாய்ந்த வண்ணம் உள்ளது. பின்லாந்துக்கு அடுத்தபடியாக கியூபாவும் கல்வியில் மிகச் சிறப்பான பணிகளை செய்து கொண்டுள்ளது. கியூபாவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவன் படிப்புடன் சேர்ந்து பல்வேறு பணிகளை தெரிந்து வைத்துள்ளான். ஒருமுறை கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் ஒலிப்பெருக்கி பழுது பட்ட போது அங்கு வந்திருந்த ஒரு கியூபா மாணவன் தன்னிடம் உள்ள டூல் கிட் ஐ எடுத்துக்கொண்டு சென்று உடனடியாக அதனை சரி செய்தானாம். இங்கே எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள் கூட வீட்டில் பியூஸ் போனால் அவர்கள் அதை சரி செய்ய இயலாத கையறு நிலையில் தான் உள்ளனர். நான் எங்கள் ஊர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்துவார். அவர் ஒரு பாட வேளையில் அதிகபட்சமாக ஐந்து பாடங்களை முடித்து அசத்தினார். அப்படி என்ன செய்தார், வகுப்பில் தங்கு தடை இன்றி சரளமாக வாசிக்கக்கூடிய மாணவர்களை எழுப்பி பாடத்தை சத்தமாக வேகமாக வாசிக்க கூறுவார். அவர் இடையிடையே "அதான் பாரு அதான் பாரு" என்று கூறுவது தான் அந்த பாடம் குறித்து அவர் அளிக்கும் விளக்கம். இன்றைய நமது கல்விமுறையில் பெரும்பாலான இடங்களில் இந்த எடுத்துக் கூறுவது என்கிற நோய் தான் பிடித்துள்ளது. கல்வியின் கட்டமைப்பு அரசுத் திட்டங்கள் பாடத்திட்ட வடிவமைப்பு தேர்வு முறைகள் என்று என்னதான் பல வேறு விஷயங்கள் இருந்தாலும் ஒரு திறமை வாய்ந்த ஆசிரியர் தன்னைவிட திறமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கி விடுவார். என்பதுதான் இந்த நூலின் சாராம்சம் இதை புரிந்து கொண்டால் போதும் இது யாருடைய வகுப்பறை என்றால் இது மாணவர்களுடைய வகுப்பறை நல்லாசிரியர்களால் பல அற்புதங்களை நிகழ்த்த களம் அமைக்கும் வகுப்பறை என்பதை புரிந்து கொள்ள இயலும். ஆகவே இந்தியாவின் கல்வி குறித்த வரலாறை பல சான்றுகளோடு பல கல்வி குழுக்களின் சாரங்களோடு மற்றும் கல்வி உளவியல் குறித்த அறிந்து கொள்ள நிச்சயமாக இந்த நூல் ஒரு நல்ல வழிகாட்டி ஆகும்.

ஆவேஷம் -மலையாளப்படம்

நான் லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் மேல்நிலை வகுப்புகள் 1992-1994 ல் படித்தேன். அருமையான ஆதிதிராவிடர் நல விடுதியில் இரண்டு ஆண்டுகள் வாசம். என்னை "லால்குடி டேஸ்" என்கிற நூல் எழுதுமளவுக்கு பாதித்த அனுபவங்கள். (அமேசான் கிண்டிலில் உள்ளது வாசியுங்கள்) 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு சம்பவம். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கிடையில் இரண்டு கோஷ்டிகள், அவர்களுக்குள் எப்போதும் ஒரு பகை புகைந்து கொண்டே இருந்தது. ஆண்டு இறுதித் தேர்வு முடியும் தருவாயில் அது சண்டையாக வெடித்தது. வலு குறைவாக இருப்பதாக கருதப்பட்ட மாணவர்கள் லோக்கல் ரவுடிகளை துணைக்கு அழைத்துக் கொண்டு வலுவாக இருந்ததாக கருதப்பட்ட மாணவர்களை சாலைகளிலேயே நைய புடைத்து விட்டனர். கிட்டத்தட்ட ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக் கல்லூரியில் நடந்ததை போன்ற ஒரு சம்பவம். அந்த காலகட்டத்தில் மீடியா வீடியோக்கள் இது மாதிரியான செட் அப் பரவலாக இல்லாத காரணத்தினால் அது பெரிய பிரச்சினையாக உருவெடுக்கவில்லை. மேல்நிலை இரண்டாம் ஆண்டு படித்த ஒரு அண்ணனுக்கு மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது அந்த அளவுக்கு இரத்தக் கலரியான ஒரு சண்டை. ஆவேசம் படத்தின் கதை சற்றேறக்குறைய இது போன்றது தான். கேரளாவில் இருந்து மூன்று மாணவர்கள் பெங்களூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்க வருகிறார்கள். வழக்கம் போல சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்கிறார்கள். கல்லூரிக்கு வெளியே லேசாக ஆதிக்கம் செலுத்த முனையும் போது இந்த கேரள மாணவர்கள் "சீனியர் ஜூனியர் எல்லாம் காலேஜ்ல தான் வெளியில் எல்லாம் கம்முனு போங்க" என்று எதிர்த்து பேசி விடுகிறார்கள். அதனால் இரவு நேரத்தில் கும்பலாக வந்து இவர்களை கடத்திக் கொண்டு போய் நான்கு நாட்கள் நன்கு வைத்து செய்கிறார்கள். அதனால் ஆவேசமடைந்த அந்த கேரள பையன்கள் எப்படியாவது இங்கே உள்ளூரில் உள்ள ஒரு ரவுடி உடன் சினேகம் கொண்டு சீனியர்களை பழிவாங்கி விட வேண்டும் என்று வெறிகொண்டு தேடுகிறார்கள். அப்படி சிக்குபவர் தான் நம்ம ஃபகத் ஃபாசில். அவரது துணைகொண்டு சீனியர்களை அடித்தார்களா ? திரும்ப ஃபகத் ஃபாசில் இடம் இருந்து விலகி தங்களது படிப்பை தொடர்ந்தார்களா இல்லை புலிவாலை பிடித்த கதை ஆனதா? என்கிற விஷயத்தை சிரிக்க சிரிக்க சொல்லும் படம் தான் இது. அவ்வளவு நகைச்சுவை. ஒரு பெரிய ரவுடிக்கான எந்த ஒரு புறத்தோற்றமும் இல்லாத ஃபகத் ஃபாசில் கழுத்து நிறைய செயின் கை நிறைய மோதிரம் மற்றும் மீசை உடல் மொழி இவற்றை வைத்து தெறிக்க விட்டிருப்பார். அவ்வளவு அசுரத்தனமான ஒரு நடிப்பு. அவருடன் இருக்கும் சக ரவுடிகளுக்கும் மிக அருமையான சண்டைக் காட்சிகளை அமைத்து இருப்பார்கள். ஏனோ தெரியவில்லை அவர்களுடன் இருக்கும் அனைத்து ரவுடிகளும் Y=-x^2 என்கிற parabola வடிவ மீசையே வைத்துள்ளார்கள். படத்தில் ஒரு அம்மா கதாப்பாத்திரம் தவிர வேறு பெண் கதாப்பாத்திரமே இல்லை. கல்லூரியில் கும்பலோடு கும்பலாக சில பெண்கள் வருகிறார்கள் அவ்வளவுதான். ஃபகத் ஃபாசிலின் குடும்ப தயாரிப்பு. நன்றாகவே கல்லா கட்டுகிறது. தொடர்ந்து மலையாள படங்கள் தமிழ்நாட்டு தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன என்பது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமா என்பது தெரியவில்லை. ஏனெனில் போதுமான பல நல்ல படங்கள் தமிழில் வராத காரணத்தினால் அந்த வெற்றிடத்தை கச்சிதமாக மலையாளப் படங்கள் நிரப்புகின்றன என்று சொல்லலாம். மஞ்சு மேல் பாய்ஸ் படத்துக்கு பிறகு இந்த படத்துக்கும் நான் பார்த்த தியேட்டரில் இருக்கைகள் அநேகமாக நிரம்பி இருந்தன. பக்கா தியேட்டரிக்கல் மெட்டீரியல் நிச்சயமாக தியேட்டரில் குழந்தைகளோடு பார்த்து இந்த கோடை விடுமுறையை கொண்டாடலாம்.

Thursday, April 25, 2024

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!!
இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற்றும் செறுப்பு அளவு எடுப்பவர் என்று நாள் தோறும் புதுப் புதுப் பணிகள் அணிவகுத்து தான் வருகின்றன. “நானும் நல்லவன்னு சொல்லிட்டானே என்று எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது” என்ற வடிவேல் கதை ஆகிவிட்டது எங்க கதை. தேசிய அளவிலான பெரும் பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமின்றி அனைத்து வகைத் தேர்தல் பணி என்று எல்லாமே எங்களை நம்பியே ஒப்படைக்கப் படுகின்றன. இந்த நாடாளுமன்ற தேர்தல் பணியில் நாங்கள் பட்ட பாட்டினை சொல்லவே இந்த கட்டுரை. தேர்தல் அறிவிப்பு வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து பணியாளர் விவரங்களை சேகரித்து விடுவார்கள். ராசி நட்சத்திரம் தவிர அனைத்து விவரங்களையும் கொடுத்துவிட வேண்டும். தேர்தல் பணியில் இருந்து தப்பித்து விடலாம் என்று விண்ணப்பத்தை கொடுக்காமல் இருந்துவிட இயலாது. விண்ணப்பங்களை பெற்று Pay roll ல் உள்ள பெயர் பட்டியலோடு அலுவலகம் வாரியாக ஒப்பிட்டு (என்னா ஒரு வில்லத்தனம்!) “ஓலை“ அனுப்பி தெறிக்க விட்டுவிடுவார்கள். எங்கள் பள்ளி தேர்தல் விண்ணப்பங்களில் என்னுடையதை மேலே வைத்து சற்று இறுக்கமாக தைத்து கொடுத்து விட்டேன். ஓவரா தைத்த காரணத்தினால் பேப்பர் கிழிந்து விண்ணப்பம் காணாமல் போய் விட்டது. கடைசிநேரத்தில் “பின்வரும் தலைமையாசிரியர்கள் விண்ணப்பம் வழங்கவில்லை“ என்று வேலைக்கே உலை வைக்கும் ஓலை வந்துவிட்டது. உடனே புதிதாக விண்ணப்பம் தயாரித்து மூச்சு வாங்க ஓடி அன்றைக்கே கொடுத்துவிட்டேன். கடைசியில் என்ன ஆகிவிட்டது என்றால் கடைசி ஆளாக விண்ணப்பம் வழங்கிய எனக்கு மட்டும் தேர்தல் பணி வந்துவிட்டது. எங்கள் பள்ளி ஆசிரியர்கள் யாருக்கும் வரவில்லை. “உங்குத்தமா எங்குத்தமா யார நானும் குத்தம் சொல்ல” என்று பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டே முதல் கட்ட பயிற்சிக்கு சென்று வந்தேன். இரண்டாம் கட்ட பயிற்சிக்கு முதல் நாள் எங்கோ பரண்மேல் இருந்த மீதி விண்ணப்பங்களை கண்டு பிடித்து மீதமுள்ள ஆசிரியர்களுக்கும் பணி வழங்கி விட்டார்கள். பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை மாலை செய்தித்தாளை பார்ப்பதைக் காட்டிலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் நமக்கு எந்த ஊரில் தேர்தல் பணி வழங்கப் பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது தான். நிச்சயமாக மாவட்டத்திற்குள் இருக்கும் ஒரு கேள்விப் படாத ஊரில் தான் பணி வழங்குவார்கள். 20 விழுக்காடு பணியாளர்களை ரிசர்வ் என்று உட்கார வைத்திருப்பார்கள். பணியில் இருக்கும் அலுவலர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ரிசர்வில் உள்ளவர்களை கதறக் கதற இழுத்து வந்து பணி வழங்குவார்கள். என்னுடைய 22 ஆண்டு சர்வீஸில் எந்த தேர்தல் பணியிலும் எனக்கு ரிசர்வ் வந்ததே இல்லை. தேர்தல் ஆணையத்தில் Randomisation செய்யும் கணினி கூட “ஒரு திறமையான தேர்தல் அலுவலரை“ விட்டுவிடக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக வேலை செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு இந்த முறை பணி வழங்கப்பட்ட கிராமத்தின் பெயரை பாதுகாப்பு காரணங்களுக்காக ( ”யாருடைய பாதுகாப்பு?” ”என்னுடையது தான்”) ”எக்ஸ்” என்றே குறிப்பிட்டு விடுகிறேன். போற ஊருல இரவு உணவு ஏற்பாடு ஆகி இருக்கும். எனவே மதிய உணவை ஜெயங்கொண்டத்தில் உள்ள பாலாஜி பவனில் ஃபுல் கட்டு கட்டிக் கொண்டேன். முன்ன பின்ன ஆனால் தாங்கணுமே. பள்ளி வளாகத்தில் நுழைந்த உடன் ஷாமியானா பந்தல் பந்தாவாக வரவேற்றது. கிராம நிர்வாக அலுவலரும் வரவேற்றார். 100 டிகிரி வெயிலில் கொதிக்கும் தார் சாலையில் வந்த களைப்பு தீர பூத் உள்ள வகுப்பறையில் குப்புற அடித்து படுத்துவிடலாம் என்று ஓடோடி வந்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. கதவை திறந்த மாத்திரத்தில் மும்பை கேட் வே ஆஃப் இண்டியாவில் புறாக்கள் பறப்பது போல வௌவால்கள் பட பட வென பறந்து வெளியே வந்து திகிலை கிளப்பியது. சினிமாக்களில் ஹீரோ காலை வேகமாக தரையில் ஊன்றினால் புழுதி பறக்கும் அது சுத்தமான டைல்ஸ் போட்ட தரையாக இருந்தாலும் சரி பூங்காக்களில் இருக்கும் பேவர் பிளாக் தரையானாலும் சரி புழுதி பறந்தால் தான் சண்டையில் பொறி பறக்கும் எஃபக்ட் வரும் அல்லவா. ஆனா எந்த சண்டை சச்சரவும் இல்லாமலே நான் கால் வைத்த மாத்திரத்தில் புழுதி பறந்தது அந்த பூத் இருந்த அறையின் தரையில். வௌவால்களின் படபடப்பு புழுதி பறந்த எஃபக்ட் இதையெல்லாம் ஒரு சில பழைய திகில் படங்களில் மட்டுமே பார்த்திருந்த சக தேர்தல் அலுவலர்கள் எல்லோரும் மூட்டை முடிச்சுகளோடு முப்பது அடி தூரம் ஓடிவிட்டார்கள். அப்புறம் ஆள் பிடித்து அறையை தண்ணீர் தெளித்து கூட்டச் செய்து புழுதியின் கோபத்தினை தற்காலிகமாக தணித்தோம். ”ஒரு ரெண்டு நாளைக்கு பொறுத்துக்கங்கப்பு!!” எங்கள் பள்ளி பூத் இருந்த அறையை நான்கைந்து முறை வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பார்வையிட்டு கட்டிடத்தின் வெளிப்புறம் பெரிய லைட் உள்ளே இன்னும் இரண்டு லைட் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். இப்படி தெரிந்திருந்தால் இருந்த ரெண்டு ஃபேன்களையும் நானே ஸ்டூல் போட்டு ஏறி கழட்டியாவது எக்ஸ்ட்ராவாக இரண்டு ஃபேன்களை வாங்கி இருக்கலாம். ஆனால் நான் போன அந்த ”எக்ஸ்” ஊரில் இந்த மாதிரி எந்த சடங்கு சம்பிரதாயங்களையும் சம்மந்தப் பட்ட அலுவலர்கள் ஆற்றவே இல்லை. அதிகாரிகள் கேட்ட போதெல்லாம் “ஐயா நம்ம ஏரியாவில் இருக்கும் பூத் எல்லாமே சும்மா தக தகன்னு கண்ணாடி மாதிரி ஜொலிக்குதுங்கய்யா” என்று கூறிவிட்டு வாளாவிருந்து விட்டார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. பில்டிங் ரூஃப் இரண்டு இடங்களில் பெயர்ந்து கொண்டு இருந்தது. ஃபேனை ஐந்தில் வைத்தால் ஒட்டு மொத்தமாக பெயர்ந்து கொண்டு தொபீர் என்று கபாலத்தில் விழுவது போல பயம் காட்டியது. ஆனால் சூழலோ “ஃபேனை பன்னெண்டுல வைடி மாலா” என்பது போல வியர்த்து கொட்டியது. என்னுடன் வந்த சக அலுவலர் என்னை பார்த்த பார்வையில் இருந்து அவர் மைண்ட் வாய்ஸை நான் கண்டுகொண்டேன். “நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம் நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது“ “டேய் புலிகேசி வெளியே வாடா“ என்பது போல ஒரு பிளிரல் பார்த்தால் கிராமத்தில் இருந்து ஒரு வயதானவர் தேனீர் எடுத்து வந்திருந்தார். “ஐயா ஒரு முப்பத்தாறு மணி நேரத்திற்கு உங்க சத்தத்தின் அளவை ஒரு ஐம்பது டெசிபல் குறைத்துக் கொள்ளுங்கள் ஐயா இல்லன்னா பில்டிங் இடிச்ச கேசுல உள்ள போய்டுவீங்க” என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். வெளியே போனால் எதிரே இருந்த சத்துணவு மையக் கட்டிடத்தின் அருகே “இடிக்கப் பட வேண்டிய கட்டிடம் அருகே செல்லாதீர்கள்“ என்கிற போர்டு கிடந்தது. “மேடம் ஆக்சுவலா இந்த போர்டு அந்த பூத் கட்டிடத்தில் தான் இருந்திருக்கணும்?“ என்று விஏஓ விடம் காமெடியாக கூறினேன். “சார் அந்த போர்டு நேற்றுவரை அங்கதான் இருந்தது“ என்று பீதியை கிளப்பினார். அப்போது தான் அடுத்ததாக ஒரு நான்கு பேர் கொண்ட அடுத்த படை வந்தது. “என்ன மேடம் ரெண்டு பூத்தா?“ என்றேன். “ஆமா சார் அந்த ரூம் நடுவுல ஸ்கிரீன் போட்டுக்கோங்க” “ஆமா, இருக்குறது புறாக் கூண்டு அதுலு பார்ட்னர்ஷிப் வேற” என்று அரசு பட வடிவேல் போல அங்கலாய்த்தபடி தேனீர் அருந்தினோம். இவ்வளவு ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு என்னவென்றால் எங்க பூத்துக்கு 400 ஓட்டு பக்கத்து பூத்துக்கு 1000 ஓட்டு. எங்க பள்ளி வளாகத்தில் ஒரு பூத் மட்டுமே அதற்கே தேவையான மேசைகள், நாற்காலிகள், ஏஜெண்ட்டுகள் அமர இருக்கைகள், ஓட்டிங் கம்பார்மெண்ட் அடிக்க ஏதுவாக பெரிய பிளைவுட் டேபிள் என்று எடுத்து வைத்து இருந்தோம். இருபால் ஆசிரியர்களின் கழிவறைகளையும் சிறப்பாக சுத்தம் செய்து வைத்திருந்தோம். ஆனால் நமக்கு வாய்த்த தலைமையாசிரியர் மிக மிக திறமைசாலி மற்றும் சாமர்த்தியசாலி. ஆமாம், பாழடைந்த மண்டபத்தை கூட்டாமல் கூட கொடுக்கிறோமே என்கிற குற்ற உணர்வு கிஞ்சிற்றும் இல்லாதவர். அதே வேளையில் பூத் இடிந்து விழுந்தால் ஃபர்னிச்சர் டேமேஜ் ஆக வாய்ப்பு இருக்கிறதே என்கிற அக்கரையில் இரண்டு பழைய மேசைகள் தவிர எதையுமே விட்டு வைக்க வில்லை. ஆனால் நாங்கள் விடுவதாக இல்லை. அவர் திரும்பி வந்து எங்க மேல கேஸ் போட்டாலும் பரவாயில்லை என்று கிராம உதவியாளர் வசம் இருந்த பள்ளி சாவியை வாங்கி நாற்காலிகளை எடுத்துக் கொண்டோம். இதற்கிடையில் இயற்கை உபாதை கழிக்க கழிவறை சென்ற சக அலுவலர் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார். “சார் பாத்ரூம்ல தவளை சார்” என்றார். ஆமாம் அந்த கழிவறை தவளைகளின் குடியிருந்த கோயில். இந்த பள்ளி ஜீவகாருண்யத்தின் மொத்த உருவமாக இருக்கிறதே. “என் ஆள அடிச்சது எவண்டா“ என்கிற தோரணையோடு கதவைத் தள்ளினேன். அங்கே ஜன்னல் மேலே இருந்த இரண்டு தவளைகள் என்னை உற்று நோக்கியபடி கிஞ்சிற்றும் பயப்படாமல் இருந்தன. “காலை மட்டும் உள்ளே வைத்து பாரடா, கபாலத்தை கவ்வுகிறேன்“ என்று அவை சூளுரைப்பது போல தெரிந்தது. “சார் நான் பக்கத்துல இருக்கிற ஏரிக்கே போய்ட்டு வந்து விடுகிறேன் சார்” என்று வேகமாக கிளம்பினார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியதே என்று வருந்திய அந்த வேளை இருள் லேசாக கவ்வியிருந்தது. “சார் அங்க ஏரிபகுதியில் பாம்பு இழையுது சார்“ என்று ஈனஸ்வரத்தில் வருத்தத்தோடு கூறினார். அடுத்த நாள் கிளம்பும் வரை ஐம்புலன்களையும் அடக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப் பட்டார். நானெல்லாம் தவளையை மதிக்கறதே கிடையாது. பாம்பே வந்தாலும் பதறாம சிதறாம (கவனத்தை சொன்னேன்) போற ஆளு. அதனால் துணிந்து கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றேன். பார்த்தால் தாழ்ப்பால் கிடையாது. Necessity is the mother of Invention ஆமாம், புதியதொரு யோகா பொசிஷனை அந்த இக்கட்டான சூழல் எனக்கு பயிற்றுவித்தது. இரவு உணவு முடிந்த பிறகு தூங்குவதற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்களுடன் உள்ள இரண்டு பெண் ஆசிரியர்கள் பள்ளியில் தலைமையாசிரியர் அறையில் உறங்கினர். காவல்துறையினர் இருவரும் வராண்டாவில் படுத்திருந்தனர். எங்கள் பூத்ஆசிரிய நண்பர் பள்ளியின் மற்றொரு அறையை திறந்து படுத்துக் கொண்டார். பக்கத்து பூத்தின் தலைமை அதிகாரியாக வந்திருந்த மற்றுமொரு தலைமையாசிரிய நண்பர் “விழுந்தா நாட்டுக்கு விழாவிட்டால் வீட்டுக்கு“ என்று வீரவசனம் பேசியபடி பூத் அறையில் ஃபேனுக்கு அடியிலேயே படுத்துக் கொண்டார். ஏனென்றால் வாக்கு இயந்திரத்தை உயிரினும் மேலானதாக மதித்து இந்திய ஜனநாயகத்தை கட்டிக் காக்க வேண்டும். ஆகவே அந்த பேய் பங்களாவில் வாக்கு இயந்திரத்தை கட்டியணைத்தபடி உறங்கியாக வேண்டும். ஆனால் உறக்கம் தான் வரவே இல்லை. நானும் சுற்றி சுற்றி வந்து பார்க்கிறேன் என்னை தவிர வளாகத்தில் அனைவருமே நிம்மதியாக உறங்கினார்கள். இரண்டு பேர் குட் நைட் மணிகண்டன் கணக்காக குறட்டை வேறு விட்டு வயிற்றெரிச்சலை கிளப்பினார்கள். இரண்டரை மணிக்கு லேசாக உறக்கம் தழுவியது. சரியாக மூன்றரைக்கெல்லாம் பக்கத்து பூத் சார் வந்து எழுப்பி விட்டார். சார் எந்திரிங்க நானெல்லாம் குளிச்சுட்டேன் பாருங்க என்றார். “உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்” என்றபடி எழுந்தேன். வாக்குப் பதிவு செவ்வனே நடைபெற்றது. எங்களுக்கு நானூறு வாக்காளர்கள் தான் என்பதால் மதியத்திற்கு மேல் சும்மாவே தான் உட்கார்ந்திருந்தோம். ஆனால் பக்கத்து பூத் மாலை ஆறுமணி வரை பரபரப்பாகவே இருந்தது. வாக்கு பதிவை க்ளோஸ் செய்து மிஷின்களை அவற்றுக்குறிய பெட்டிகளில் வைத்து சீல் வைத்து விட்டு டாக்குமெண்ட்களை அதற்குறிய கவர்களில் வைத்து விட்டு “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…“ என்றபடி காத்திருந்தோம் காத்திருந்தோம் இரவு இரண்டு மணி வரை காத்திருந்தோம். முதல் நாள் வேறு ஒருமணி நேர போதா உறக்கம் ஆகையால் வாக்குபதிவு இயந்திரத்தை ஒட்டி பெஞ்சை போட்டு லேசாக கண்ணயர்ந்தேன். இரண்டரைக்கு மண்டல அதிகாரி பொட்டி எடுக்க வந்து எழுப்பினார். “ஆமா, நான் எங்க இருக்கேன், நீங்க எல்லாம் யாரு” என்று ஃப்ரண்ட்ஸ் பட சார்லி கணக்காக ஒரு பத்து நிமிடங்கள் தட்டு தடுமாறி பிறகு சமாளித்தேன். மூன்று மணிக்கு வண்டியை கிளப்பி, வழியில் இரண்டு நைட் கடைகளில் தேனீர் அருந்தி விட்டு அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்து படுத்தேன். காலை ஒன்பதரைக்குத்தான் எழுந்தேன். ஆக அரசு எங்களை நம்பி ஒப்படைத்த ஒரு மகத்தான பணியை வெற்றிகரமாக முடித்த திருப்தி மனதில் ஏற்பட்டது. பள்ளிக் கட்டிடம், கழிவறை, ஃபர்னிச்சர் வசதிகள் என ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அந்த கிராம நிர்வாக அலுவலர் அவரால் இயன்ற அளவில் கேட்டதை எல்லாம் செய்து கொடுத்தார். அது போல கிராமத்தினர் சிறப்பான முறையில் உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். வாக்குப் பதிவு முடிந்த பிறகும் கூட இரவு உணவை சிறப்பாக ஏற்பாடு செய்து வழங்கினார்கள். ஏஜெண்டுகளும் சரி வாக்காளர்களும் சரி எந்த வித சிறு வாக்குவாதமோ விதிமீறலோ இன்றி நான் கூறிய சட்டதிட்டங்களை முறையாக அனுசரித்து வாக்குப் பதிவு மகிழ்ச்சியாக முடிய ஒத்துழைப்பு வழங்கினார்கள். அந்த வகையில் அந்த “எக்ஸ்“ கிராமத்தை நினைத்து மகிழ்ச்சி தான்.

Thursday, April 11, 2024

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத்தினால் அந்த படம் மெகா ஹிட் அடித்ததோடு இன்றி கௌதம் குறிப்பிடத்தக்க ஸ்டைலிஷ் இயக்குனர் ஆனார். இன்று பார்த்த படம் விஜய் ஆண்டனி நடித்த "ரோமியோ". அருணும் அகிலாவும் ஒரு திருமண சடங்கிற்காக சென்னை சென்றிருந்தார்கள். லீவு நாள் வேறு. ஆகவே இந்த சுதந்திரப் பொன்னாளை அவசியம் கொண்டாடியே தீர வேண்டும். என்ன செய்யலாம் என்று தீவிர யோசனையில் கடைத்தெருவை கடந்தபோது ரோமியோ பட ரிலீஸ் போஸ்டர் கண்ணில் பட்டது. முதலிரவு அறையில் புதுமாப்பிள்ளை கையில் பால் செம்பு, பெண்ணோ ஒரு தேர்ந்த BAR TENDER ன் நேர்த்தியோடு சரக்கை குவலையில் குடைசாய்த்துக் கொண்டு இருந்தாள். ஆகா, ஏதோ சம்பவம் இருக்கு என்று எண்ணி டிக்கெட் புக் பண்ணினேன்.* (ஆனா, போஸ்டரில் இருந்த அந்த காட்சி படத்தில் இல்லை என்று படம் முடிந்தபோது ஆதங்கத்தோடு இரண்டு பேர் பேசிக்கொண்டு சென்றனர்) தியேட்டர் போன பிறகு தான் புரிந்தது அவ்ளோ அவசரமாக ஆன்லைனில் புக் பண்ணி இருக்க வேண்டாம் என்று. பாதி தியேட்டர் கூட நிரம்பவில்லை. சரி படத்திற்கு வருவோம். நமது கலாச்சாரத்தில் பெற்றோர் தங்கள் பாசத்துக்குறிய குழந்தைகளுக்கு நடத்தும் ஆகச்சிறந்த வன்முறையான சூதாட்டம் என்பது ARRANGED MARRIAGE தான். (எனக்கெல்லாம் எனது விருப்பம் தான்) ஒவ்வொரு பையனுக்கும் பெண்ணுக்கும் பெற்றோரிடம் ஒரு முகமும் பர்சனலாக வேறுமுகமும் உண்டு. இது தெரியாமல் மடத்தனமாக "என் பையன் கழுதையை கட்டிக் கொள்ள சொன்னாலும் கட்டிக் கொள்வான்" என்று பெருமை பீத்தக் கலையம் வேறு!! நமது சமூக சூழலில் திருமணம் மிகவும் புனிதமாகவும், வாழ்க்கையின் அதிமுக்கிய படிநிலையாகவும் பார்க்கப் படுகிறது. எனவே தான் திருமண பந்தம் ஒவ்வாத சூழலிலும் வாழ்நாள் முழுவதும் சகித்துப் போக நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். பொருந்தாத திருமண உறவை முறித்து வெளியேறி ஆசுவாசம் அடைவோரை பற்றி மிகவும் மோசமான அபிப்பிராயத்தையும் அவர்கள் குறித்த தவறான முன் அனுமானத்தையும் சமூகம் கட்டமைத்துக் கொள்கிறது. இந்தப் படத்தின் கதைகூட மௌனராகம் படம் போன்றதுததான். ரேவதிக்கு கார்த்திக் என்பதற்கு பதிலாக அவளது லட்சியம். நாயகிக்கு சற்றும் நாயகன் மீது விருப்பம் இல்லை. ஆனாலும் அவளது லட்சியத்தை அடைய உதவுகிறான். இதன் காரணமாக நாயகி மனது மாறி இணைந்தார்களா என்பதுதான் கதை!! சுவாரசியமான தெளிவான திரைக்கதை. வசனங்களும் சிறப்பு. "சார், ஹீரோவை பார்த்து நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என்று ஹீரோயின் கேக்குறா சார், அதுக்கு ஹீரோ ஓங்கி அறையுறான் சார்?" "அறைஞ்சா?!, அறைஞ்சா ஆம்பளை ஆயிடுவானா?!, சார் என்ன சார் சீன் வைக்கிறீங்க கொஞ்சம் நல்லதா வைங்க சார். இத மாத்திடுங்க" கதையை நகைச்சுவையாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். எல்லோர் கேரக்டர்களிலும் காமடி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது. ஆனால் மொத்த நகைச்சுவையும் விஜய் ஆண்டனியால் காலி ஆகிவிடுகிறது. பாவம் அவருக்கு சுத்தமாக காமடி வரவில்லை. விஜய் ஆண்டனி இடத்தில் கார்த்தி இருந்தால் பிரித்து மேய்ந்திருப்பார். ஆனால் படம் தொய்வில்லாமல் நன்றாகவே செல்கிறது. நிச்சயமாக பார்க்கலாம்.

Saturday, March 30, 2024

கம்யூனல் ஜி.ஒ - பேராசிரியர் அன்பழகன்

வகுப்புரிமைப் போராட்டம் ( கம்யுனல் ஜி.ஓ) புத்தகம்: வகுப்புரிமைப் போராட்டம் ( கம்யுனல் ஜி.ஓ) ஆசிரியர்:பேராசிரியர் க.அன்பழகன் புத்தகம் “கம்யுனல் ஜி.ஓ“ உச்ச நீதி மன்றத்தால் முடக்கப்பட்ட நேரத்தில் “அவால்“ எல்லாம் எப்படி குதூகலம் அடைந்திருப்பார்கள் என்கிற கற்பனை (நையாண்டி தொனிக்கும்) உரையாடலில் ஆரம்பித்து வகுப்புரிமைப் போராட்டம் உருவான விதம் வளர்ந்த வரலாறு அரசியல் அமைப்பின் முதலாவது சட்டத்திருத்தம் மூலமாக சமூக நீதி நிலைநிறுத்தப்பட்டதோடு முடிகிறது. ஆழமான ஆய்வு சமூக நீதி குறித்த மிகச்சரியான பார்வை ஆங்காங்கே எள்ளல் என அருமையாக எழுதியிருக்கிறார் பேராசிரியர். (ஒரு இடத்தில் “உலக உத்தமர்“ என்று காந்தியை விளித்திருப்பார்). ”வர்ணாசிரம (அ)தர்மத்தைத் தோற்றுவித்து, ஜாதிக்கொரு தொழிலென மக்களை ஒப்புக்கொள்ள வைத்து, அதை ஒப்பாமல் மக்கள் புரட்சி எண்ணம் கொள்ளாமல் இருக்க மூடநம்பிக்கைகளையும், பொய்க்கதைகளையும் புகுத்தி அறிவை அடிமைப்படுத்தி, எவரேனும் அதற்கு மாறாகப் புரட்சி செய்தால் அடியோடு ஒழிக்க மனு (அ)நீதியை வகுத்து அதை அரசுகளெல்லாம் ஏற்ற நடக்கச் செய்தல்” படிக்கும் போதே தலைசுற்றும் அளவுக்கு சூழ்ச்சி மற்றும் வஞ்சகத்தை ஆழமாக சமூகத்தில் வேரூன்றும் அளவுக்கு ஆயிரம் ஆண்டுகாலமாக ஒரு விஷ விருட்சமாக வளர்த்தெடுத்த பார்ப்பனிய சூழ்ச்சிகளை தோலுரிக்கும் ஒரு அருமையான புத்தகம் தான் இது, பார்ப்பனரல்லாதோருக்கு கல்வி உரிமை கிஞ்சிற்றும் கிடையாது, படிப்பது பார்ப்பன மக்களின் ஏகபோக உரிமை என அனுபவித்து வந்த நிலையை மாற்ற1917 ல் நீதிக்கட்சி முயற்சித்து வெற்றி கொண்ட ஒரு அரசாணை தான் கம்யுனல் ஜி.ஓ. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தேவை என்கிற எண்ணம் காங்கிரஸ் கட்சியில் இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்கள் மத்தியில் 1920 களில் உதித்தது. என்னதான் பெரியார் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கட்சிக்குள்ளே இருந்து வற்புறுத்தினாலும் பார்ப்பன சூழ்ச்சி அதற்கு செவிசாய்க்கவில்லை. தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வருவதற்கு காரணமே வகுப்புவாரி பிரிதிநிதித்துவத்தை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளாததுதான். கம்யுனல் ஜி.ஓ என்ன சொல்கிறது? மொத்தம் உள்ள 12 இடங்களில் இந்து பார்ப்பனரல்லாதோருக்கு 5 பார்ப்பனருக்கு 2 முகம்மதியர்களுக்கு 2 கிருஸ்தவர்களுக்கு 2 (ஆங்கிலோ இந்தியர்கள் அடக்கம்) மற்றவர்களுக்கு 1(ஆதிதிராவிடர்கள் அடக்கம்) அதாவது 100 க்கு 3 பேராக உள்ள பார்ப்பனருக்கு 100க்கு 17 உத்தியோகங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆதிதிராவிடர்களுக்க 12 ல் ஒன்று அதுவும் ஏனையோர் என்கிற பிரிவில். இதை பார்த்தவுடன் பார்ப்பனர் நெஞ்சம் பதறுகிறது. ஆனாலும் அவர்கள் எதையும் தான் நேரடியாக எதிர்க்க மாட்டார்கள் அல்லவா? அவர்கள் இன்று வரை வைத்துக் கொண்டு வரும் ஓயாத ஒப்பாரியான “தகுதி“ மற்றும் ”திறமை” குறித்த நீலிக்கண்ணீர் வடிக்கலாயினர். இந்த நூலில் “தகுதி மற்றும் திறமை” என்கிற வெற்றுக் கூச்சலையும் அதன் பின்னால் உள்ள சூழ்ச்சியையும் ஒரு சேப்டரே ஒதுக்கி “வச்சு செஞ்சிருக்கார்” பேராசிரியர். என்னதான் அரசாணை போட்டாலும் கல்லூரி சேர்க்கையின் போதே பார்ப்பனிய “கைங்கர்யம்“ வேலை செய்துவிடும் என்பதால் கம்யுனல் ஜி.ஓ எந்த அளவில் பின்பற்றப் படுகிறது என்பதை கண்காணிக்க ”கல்லூரிக் குழு” என்கிற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி இருந்தார்கள். பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது “கம்யுனல் ஜி.ஓ“ வை பின் வாசல் வழியாக வந்து எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கருதும் ஆட்சியாளர்கள் “கலி முத்திடுத்து லோகம் கெட்டுடுத்து” தகுதி திறமைக்கு லோகத்துல மதிப்பில்லாமல் போயிடுத்து என்று நீலிக்கண்ணீர் வடித்து மெரிட்டுக்கு என்று 20 விழுக்காடு பெறுகின்றனர். பார்ப்பனிய ஒதுக்கீடு மற்றும் மெரிட் என்று இரட்டை வாசலை திறந்து கொண்டு மேலிட பதவி வகிக்கும் பார்ப்பனிய துணை கொண்டு கல்லூரிகளில் மற்றவர்களுக்கு உரிய இடத்தையும் அபகரிக்கிறார்கள். மேலும் கல்லூரிக் குழு வையும் கலைத்து விடுகிறார்கள். இருந்தும் கூட அவர்களின் ஆசை தீரவில்லை. அனைத்து பிரிவு மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் அரசாங்கத்தில் 100 விழுக்காடு பதவிகளையும் நாமே வகிக்க வேண்டும் என்கிற பேராசையால் சுப்ரீம் கோர்ட் வரை சென்று ( இந்தியா சுதந்திரம் அடைந்து புதிய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு) சட்ட நுணுக்கத்தை காட்டி வெற்றிகரமாக நீக்கி விடுகிறார்கள். சென்னை மாகாணம் (அப்போது அது தானே பெயர்) முழுவதும் பள்ளி கல்லூரிகளில் போராட்டம் வெடிக்கிறது. இந்த காலத்தில் மக்கள் பணத்தில் கொழுத்த சூப்பர் ஸ்டார் ”சிஸ்டம்” இஞ்சினியர்கள் கூட போராட்டம் தவறு என்று கூறி இளைஞர் எழுச்சியை காயடித்து விட்டு திரும்ப எழுச்சி வரட்டும் அப்போ வரேன் என்று பிதற்றுகிறார்கள். மாணவர்கள் தங்களது படிப்பு உரிமைக்காக தொடர்ந்து போராடுகிறார்கள். அரசியல் சட்டம் புனிதமானது. அந்த சட்ட திட்டங்களை நாம் தான் மதிக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் மீது பார்ப்பனியம் கோமியம் தெளிக்க பார்க்கிறது. போராட்டக் காரர்களோ “மக்கள் நலனுக்காகத் தான் சட்டம், நலன் கெடும் என்றால் சட்டத்தை திருத்தலாம் தவறில்லை” என்று சட்ட திருத்தத்திற்கான வழிமுறையும் சட்டத்திலேயே உள்ளது என சுட்டிக்காட்டுகின்றார்கள். (உப்புக்கு பிரயோஜனம் இல்லாத ஜல்லிக்கட்டுக்கு எழுச்சியோடு போராடிவிட்டு ”நீட்“ டில் கோட்டை விட்டிருக்கிறோம் நாம்) வேறு வழியின்றி கல்வியில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் முதலாவது சட்டத்திருத்தமாக 1951 ல் வெற்றிகரமாக நிறைவேறுகிறது. ஆம், அரசியல் சட்டத்தையே மக்கள் நலனுக்காக முதல் முறை திருத்தம் செய்ய காரணமாக இருந்தது திராவிடம். அப்போது கோட்டை விட்டிருந்தோம் எனில் பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் பலபேர் கல்லூரியை பார்த்திருக்க இயலாது. இடஒதுக்கீடு என்பது என்னவோ ஆதிதிராவிட மாணவர்கள் மட்டுமே அனுபவிக்கும் “சலுகை“ என்கிற எண்ணம் பெரும்பாலான பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மத்தியில் இருந்ததை நானே பார்த்திருக்கிறேன். அவர்களே தகுதி திறமை பற்றி பேசி சக ஆதிதிராவிட மாணவர்களை சிறுமை படுத்த முயல்வதையும் கண்ணுற்றிருக்கிறேன். இடஒதுக்கீடு என்பது உரிமை என்பதோ அதன் அடிப்படையோ தெரியாத பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பலபேர், அமர்ந்திருக்கும் கிளை மீதே கோடரி வீசும் போதெல்லாம் ஆதிதிராவிட மாணவர்கள் மட்டுமே இடஒதுக்கீட்டு “சலுகை“க்காக சிலுவை சுமந்திருக்கிறார்கள். தற்போது 28 மதிப்பெண் எடுத்துவிட்டு EWS என்கிற ஒதுக்கீட்டில் வங்கிப் பணியாளர் பணியினை பெற்றவர்களிடம் கேட்டுப் பாருங்களேன் “தகுதி திறமை“ என்னவாயிற்று என்று, அவா எல்லோரும் “செலக்டிவ்“ செவிடர்களாகி விடுவார்கள். 80 மதிப்பெண் எடுத்த எஸ்.ஸி, ஓபிசி மாணவர்களுக்கு கிடைக்காத பணி 28 மதிப்பெண் எடுத்த முற்பட்ட வகுப்பில் பிறந்த வருடம் 8 லட்சம் வருமானம் ஈட்டும் ”ஏழை”களுக்கு கிடைக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை அல்ல உரிமை என்கிற புரிதலாவது குறைந்தபட்சம் தேவை.

Sunday, March 24, 2024

எருமை மறம் - மௌனன் யாத்ரிகா

நூல் - எருமை மறம் ஆசிரியர் - மௌனன் யாத்ரிகா பதிப்பகம் - நீலம் விலை - ரூ.200 நூலாசிரியர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரியலூர் கலைக் கல்லூரியில் தமிழ் துறையில் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே மௌனன் யாத்ரிகா அவர்களின் "அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது" என்கிற ஜனரஞ்ச கவிதை தொகுப்பையும் "வேட்டுவம் 100" என்கிற அருமையான வேட்டையாடுதல் பற்றிய கவிதை தொகுப்பையும் வாசித்துள்ளேன். வேட்டுவம் நூறு கவிதை தொகுப்பில் ஒவ்வொரு கவிதையும் நமக்கு வேட்டையாடுவதை அருகில் இருந்து பார்க்கும் பரவச உணர்வை தருவது போல் எழுதியிருப்பார். அதோடு மட்டுமின்றி அவர்களை அவரின் ஒவ்வொரு கவிதையும் நமது மனக்கண்ணில் காட்சிகளாய் விரியும் வகையில் தெளிவாக வார்த்தைகளால் காட்சிப்படுத்தி இருப்பார். அந்த நூலை வாசித்த போது நிச்சயமாக இது பெரிய பெரிய விருதுகளை பெற வேண்டும் என்று எண்ணினேன். தற்போது அந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்து மகிழ்ந்தேன். கவிஞர் மௌனன் யாத்ரிகா அவர்கள் பல திரையிசை பாடல்களையும் எழுதியுள்ளார் தற்போது வெளியாகியுள்ள தங்கலான் படத்தில் கூட பாடல்கள் எழுதி இருக்கிறார். இந்த நூல் நீலம் பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்டது. கெட்டியான அட்டையில் தரமான தாளில் மிக நேர்த்தியாக உயர்தரத்துடன் நூலை நீளம் வெளியிட்டுள்ளது. ஆதித்யன் அவர்களின் அட்டைப் படமும் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் அவர்களின் கோட்டோவியங்களும் நூலை இன்னும் சிறப்பாக்கியுள்ளது. நூலின் வெளியீட்டு விழாவானது தொல் திருமாவளவன் அவர்கள் மற்றும் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்கள் பேசியவைகளை தனி நூலாக அச்சிட்டால் இன்னும் சில பெரிய நூல்கள் நமது கிடைக்கக்கூடும் அவ்வளவு ஒரு அறிவார்ந்த விழாவாக அது அமைந்தது. ஆக, வெளியிட்டு விழாவில் இருந்து இந்த நூலை வாங்கி சுடச்சுட வாசித்து விட வேண்டும் என்று உடனடியாக ஆன்லைனில் ஆர்டர் போட்டு வரவழைத்தேன். இந்த நூல் மலைப்பகுதிகளில் இருந்த தொல் குடிகள் தங்களை ஆக்கிரமிக்க வந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக சண்டையிட்ட வரலாற்றை வீர வரலாற்றை கவிதை வழியில் புனைந்துள்ளது. அதோடு மட்டுமின்றி இந்த நூலில் காமமும் வீரமும் அடுத்தடுத்து வரும் வகையில் கவிதைகளை தொகுத்துள்ளார். சோ ஆகவே இந்த கவிதை நூல் தொல்குடிகளின் அகத்தையும் புறத்தையும் பேசும் நூலாகும். எருமை மறம் என்றால் என்ன?! வல்லின "ற" வந்திருப்பதால் இது நிச்சயமாக வீரத்தை குறிக்கும் சொல் என்பதை அறிந்திருப்பீர்கள் அது என்ன எருமை மறம்?! தனது படை பரிவாரங்கள் அனைவரும் அஞ்சி பின்வாங்கினாலும் கூட தனியா ஒரு நாளாக எதிரிகளை அடித்து துவம்சம் செய்ய துணியும் ஒரு வீரனின் வீரம் தான் எருமை மறம்!! என்னதான் பசுவை போல எருமையும் பால் கொடுத்தாலும் நாம் பசுவுக்கு கொடுக்கும் புனித இடத்தை எருமைக்கு தருவதில்லை. இன்றும் கூட எருமையை ஒரு அபசகுணம் மற்றும் தீமையின் குறியீடாகவே வைத்துள்ளோம். ஆனால் சங்க காலத்தில் எருமைகளை பற்றி பல்வேறு வகையில் வீரம் செறிந்த பாடல்கள் எல்லாம் இருந்துள்ளது இது குறித்து ஆய்வு செய்து பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் "அணிநடை எருமை" என்கிற ஒரு நூலையே கூட எழுதி உள்ளாராம். நூலின் துவக்கமே அதகலமாக உள்ளது " மாட்டுக்கொம்பை குருதியில் தோய்த்து ஊரெல்லையில் நட்டு வைத்துப் போயிருந்தார்கள். எங்களை அச்சுறுத்தும் குறிப்பு அது" என்று ஆரம்பமே ஒரு போர் முழுவதற்கான அறிகுறியாக நம்மை அச்சுறுத்தும் வாசகமாக அமைந்துள்ளது. அடுத்ததாகவே போருக்கு முன்பான கூத்து, கொண்டாட்டமாய் கவிதையில் விளைந்துள்ளது. கிராமத்து வாழ்வியலை வாழ்ந்ததோடு மட்டுமின்றி உற்று நோக்கியவர்களால் மட்டுமே இந்த அளவுக்கு நுட்பமான உவமைகளை கவிதைகள் சொருகி வைக்க முடியும் "ஈட்டிகளை நிற்க வைத்தால் போல் தோற்றம் தரும் கம்பங்கதிர்கள் வளர்ந்த காட்டில்" காடு என்பது தொல்குடிகளுக்கு அள்ளி அள்ளி தரும் அமுத சுரப்பியாக இருந்துள்ளது என்பதை அறிவோம் அதை தான் கவிஞர் இவ்வாறு கூறியுள்ளார் " தீது செய்யும் அரசமைந்து நாமெல்லாம் கூழுக்கு தாளம் போடும் நிலையே வந்தாலும் இந்த காட்டு வளம் மிஞ்சியிருந்தாலே போதும் உண்டு கழித்து உயிர்த்திருக்கலாம்!!" நான் இதுவரையில் நத்தை கறி சாப்பிட்டதில்லை உங்களை எருக்கம் அந்த அனுபவம் இருக்கலாம் அது சமையல் செய்யும் வழிமுறைகள் கூட எனக்கு தெரியாது ஆனால் கவிஞர் ஒரே வரியில் அதன் 'ரெசிபி'யை அழகாக கூறியுள்ளார். அதோ காண்! சிறிய மாவடு போன்றிருக்கும் நத்தையின் மூடி கொதி நீரில் திறந்து கொள்வதுபோல் தம் தலைவியின் மனம் தாழ் திறவாதாவெனத் தவிக்கும் காளையர் கண்களை;" இந்த வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்து வாசித்து சிலாகித்தேன் "எனக்கும் கொஞ்சம் காமத்துப்பாலை பயிற்றுவியேன். நானும் ஒரு புலியின் மீசையில் தேன் தடவி நீவி விட விரும்புகிறேன்" இந்த நூலில் கரியன் என்கிற வீரனின் வீரத்தையும் காமத்தையும் அழகாக தந்துள்ளார். ஆனால் கரியன் உள்ளே வருவதே 'இன்டர்வல் பிளாக்கில்' தான். ஊரை காப்பாற்ற மிகவும் அரிதான மலர் ஒன்றை பறித்து வர வேண்டி கரியன் செய்யும் சாகசத்தோடு கரியனின் அறிமுகம் சிறப்பாக துவங்குகிறது. வேட்டையாடிய மிருகங்களை சமைப்பது பற்றி கவிஞர் தரும் விளக்கங்கள் நமது நாசியில் அந்த கவிச்சு வாடையை வரவழைத்து நாவில் நீர் பெருக்கெடுத்து ஓட செய்கிறது!! இதுபோல சொற்சுவை நாச்சுவையை தூண்டும் கவிதைகள் ஏராளமாக வேட்டுவம் நூறு நூலிலும் அழகாக வடித்திருப்பார். காதலியின் நினைவு கரியனின் நெஞ்சில் ஊருவதை இப்படி கூறியிருக்கிறார். " மண்பானையில் நண்டூருவது போல் நெஞ்சில் அவள் நினைவூரிய போதும்" கரியனின் வேட்டியை அவன் நினைவாக வைத்துக் கொண்ட காதலி அந்த வேட்டியை 15 க்கு மேற்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்துகிறாள்!! கரியனின் காமம் அவனது காதலிக்கு எப்படி இருந்தது என்பதற்கான உவமையை கண்டு பிரமித்து போனேன்!! " உயிரோடு துள்ளும் நூறு கெளுத்திகளை மார்பில் அள்ளி போட்டுக் கொண்டதைப் போல இருந்தது பலம் கொண்ட அவன் காமம்" கவிஞரின் விவரனைகளின் நுட்பமானது மிகவும் சிறப்பான ஒன்றாகவும் அரிதாகவும் இருக்கிறது. "குதிரையின் கவுட்டியில் புகுந்து நெஞ்செலும்பை நொறுக்கும் வேட்டை நாய்களின் பற்களைக் கூர் தீட்ட வேண்டும்!!" இந்தக் கவிதை நூலைப் பற்றி முத்தாய்ப்பாகச் சொல்ல வேண்டுமானால், கவிஞரின் மொழியிலேயே கூறலாம். "மொழிக்குப் பிறகு நிலமே இனத்தை அழியாமல் காக்கும்" அந்த நிலத்தை காக்க வேண்டியது அங்கே இருக்கும் மக்களின் கடமை என்பதாக உள்ளது!! இங்கே நான் குறிப்பிட்டு காட்டி இருப்பது மிக சொற்பமான வரிகள் தான். நூலில் ஏராளமான அற்புதமான கவிதைகள் பொதிந்துள்ளன. அதுவும் அகப்பாடல்களில் காமச்சுவை அவ்வளவு அருமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் நிச்சயமாக வாசிக்க வேண்டிய தொகுப்பு.

Tuesday, March 19, 2024

விலக்கி வைக்கப்பட்டவர்கள் சாதித்த வரலாறு!!

விலக்கி வைக்கப் பட்டவர்கள் சாதித்த வரலாறு!!
நான் பி.எட் முடித்த அடுத்த வருடம் (2000-2001) ஒரு தனியார் பள்ளியில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆசிரியராக பணியாற்றினேன். என்னை பத்தாம் வகுப்பு “பி“பிரிவிற்கு வகுப்பாசிரியராக நியமித்தார்கள். எனக்கோ பெருமை பிடிபடவில்லை. வந்த உடனே பத்தாம் வகுப்புக்கு வகுப்பாசிரியரா?! வகுப்பில் பிரபல நகைக் கடை ஓனர் பையன் முதல் இனிப்புக்கடை ஓனர் பையன் வரையில் அடக்கம். ஒரு பேருந்து முதலாளி பெண்கூட படித்தார். வீட்டுப் பாடம் செய்வதில் சற்று முன்ன பின்ன இருந்தாலும் ஆசிரியரிடம் அவ்வளவு அன்பாகவும் பணிவாகவும் இருப்பார்கள். நானும் கஷ்டமான கணக்குகளை நான் போட்டுவிட்டு ரொம்ப சப்பையான கணக்குகளை அவர்களுக்கு வீட்டுப் பாடமாக தருவேன். அவர்களும் போட்டு வந்துவிடுவார்கள். பள்ளி தாளாளர் மற்ற வகுப்புகளுக்கு கொடுக்கும் எந்த நெருக்கடியும் எனது வகுப்பிற்கு தரமாட்டார். இவர்கள் மாநிலப் பாடத்திட்டம் படிப்பவர்கள் (அப்போது மெட்ரிக் பாடத்திட்டமும் அமலில் இருந்தது) மேலும் “மொதலாளி நம்மை முழுதாக நம்புகிறார்“ என்று பெருமை பொங்க எண்ணிக் கொண்டு கம்பீரமாக வலம் வருவேன். டிசம்பர் மாதவாக்கில் பத்தாம் வகுப்பு பிரைவேட் மாணவர்கள் விண்ணப்பம் செய்யும் தருணம் (அப்போதெல்லாம் ஆன்லைன் எல்லாம் இல்லை ஒன்லி “பென்“லைன் தான்) வந்த போது எனது வகுப்பு மாணவர்கள் 25 பேரையும் கொத்தாக விண்ணப்பிக்க அழைத்துச் செல்லுமாறு பிரின்சிபல் என்னை பணித்த போது தான் அவர்கள் எல்லாம் பள்ளி பெயரில் எழுதவில்லை பிரைவேட்டாக எழுத உள்ளனர் என்பதை அறிந்து கொண்டேன். அதாகப் பட்டது என்னுடைய வகுப்பு என்று நான் பெருமையாக பீற்றிக் கொண்டது ஒரு டுடோரியல் கிளாஸ். எங்க பள்ளியை தப்பா நினைக்காதீங்க, அந்த 25 மாணவர்களும் அந்த நகரத்தின் வெவ்வேறு தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரையில் மெட்ரிக் பாடத்திட்டத்தில் படித்தவர்கள். ஆண்டு இறுதியில் “உங்க பிள்ளை ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி அடைய வாய்ப்பில்லை, அதனால் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறோம், அவன் பெயிலாகி எங்க பள்ளியில் இரண்டாம் வருடம் படிக்கலாம் அல்லது ஒன்பதாம் வகுப்பு பாஸ் என்று சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்கு இடம் பெயரலாம்” என்று “டீல்“ பேசியுள்ளனர். இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்து வெளியேறியவர்களை அரவணைத்து இந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து அதே வேளை தனது பள்ளி தேர்ச்சி விழுக்காட்டிற்கும் பங்கம் வராமல் பிரைவேட்டாக எழுத வைப்பது தான் எங்க பள்ளியின் செயல் திட்டம். ஆண்டு விழாவின் போது எல்லா வகுப்பு மாணவர்களும் அவரவர் வகுப்பு சார்பாக ஒரு நடனத்தை ஏற்பாடு செய்தனர். எனக்கு அந்த மாதிரி விஷயங்களில் ஆர்வமோ முன் அனுபவமோ கிடையாது. ஆனாலும் கூட பசங்க “ஈஸ்வரா வானும் மண்ணும் பிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா…” என்ற பாடலை தேர்வு செய்து அவர்களே பிராக்டீஸ் செய்து வந்தனர். எங்க வகுப்பு ரிகர்சலை பார்வையிட முதல்வரை அழைத்த போது “சார் உங்க வகுப்பு வேண்டாம் சார்” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டார். இது அன் அபிஷியல் வகுப்பு என்பதால் மேடையேற்ற பயந்திருக்கிறார் என்று பின்னர் உணர்ந்தேன். மெட்ரிக் மாணவர்கள் எல்லோரும் ஒரே சென்டரில் தேர்வினை எழுத எனது வகுப்பு மாணவர்கள் அந்த நகரத்தின் பிரைவேட் சென்டரில் அகரவரிசைப் படி அமர்வதால் 25 பேரும் 15 வெவ்வேறு அறைகளில் எழுதினார்கள். அவர்களோடு எழுதுபவர்கள் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்கள். மேலும் இவர்கள் தனியார் பள்ளி சீருடையில் வருவதை வித்தியாசமாக பார்ப்பார்கள். அவர்களை நானே தேர்விற்கு அழைத்துச் சென்று எழுதச் செய்து அழைத்து வருவேன். இப்போது நான் சொல்லப் போவது உங்களுக்கு நம்ப முடியாததாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆமாம், 25 பேரில் 23 பேர் தேர்ச்சி பெற்று விட்டனர். ஏற்கனவே பயின்ற பள்ளியில் இருந்து விரட்டப்பட்ட அந்த மாணவர்களில் ஒருவன் 443 மதிப்பெண் எடுத்தான். கணிதப் பாடத்தில் அனைவரும் தேர்ச்சி பெற்றதோடு இரண்டு பேர் 90க்கு மேல் முக்கால் வாசி மாணவர்கள் 60 விழுக்காட்டிற்கு மேல் பெற்றிருந்தார்கள். எனது மாணவர்களின் பழைய பள்ளி நிர்வாகம் எந்த அளவுக்கு இவர்களின் திறமையை கணித்து உள்ளது பார்த்தீர்களா?

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...